அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் இங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்பு - லண்டனில் இரண்டரை லட்சம் பேர் பிரம்மாண்ட பேரணி
Jul 14 2018 11:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் இங்கிலாந்து வருகையை எதிர்த்து லண்டனில் இரண்டரை லட்சம் பேர் பிரம்மாண்ட பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர், இங்கிலாந்து ராணி எலிசபத்தை சந்தித்தார். அப்போது, இருநாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இங்கிலாந்து ராணியுடன், ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதையடுத்து, அந்நாட்டு பிரதமர் தெரசா மேவை அதிபர் ட்ரம்ப் சந்தித்தார். இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, அமெரிக்க-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் முற்றிலும் சாத்தியமானது என அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
இதனிடையே, ட்ரம்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, லண்டனில் உள்ள முக்கிய வீதிகளில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பிரம்மாண்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ட்ரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு, நிறவெறி, சர்ச்சைக்குரிய அரசியல் ஆகியவற்றிற்கு எதிராக போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பினர். மேலும், இஸ்லாமியர்கள் மீதான தடைக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.