வடகொரியாவில் அணு ஆயுதங்களை முற்றிலுமாக கைவிடுவது தொடர்பாக அடுத்த மாதம் 12ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொள்ள விரும்பவில்லை : துணை அதிபர் மைக் பென்ஸ் தகவல்
May 22 2018 12:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகொரியா அதிபரின் போக்கு காரணமாக, அந்நாட்டில் அணு ஆயுதங்களை முற்றிலுமாக கைவிடுவது தொடர்பாக அடுத்த மாதம் 12ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொள்ள விரும்பவில்லை என துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. இந்நிலையில், தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட வடகொரியா, அணு ஆயுத சோதனைகளை கைவிட முன்வந்ததோடு, இதுதொடர்பாக அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் விருப்பம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 12ம் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆகியோர் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், அணு ஆயுதமற்ற பகுதியாக கொரிய தீபகற்பத்தை உருவாக்க மிரட்டும் தொனியில் டிரம்ப் பேசவே, ஆத்திரமடைந்த வடகொரிய அதிபர், பேச்சுவார்த்தையை ரத்து செய்துவிடுவதாக எச்சரித்தார். இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வடகொரிய அதிபரின் போக்கு காரணமாக, சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்க விருப்பப்படவில்லை என குறிப்பிட்டார். வடகொரியாவிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என்பது டிரம்பின் எண்ணம் என்றும், மைக் பென்ஸ் தெரிவித்தார்.
இதனிடையே, நாளை தொடங்கி 25ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வடகொரியாவில் உள்ள அணு ஆயுத சோதனைக் களத்தை தகர்க்க மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கையை நேரில் பார்வையிட வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு அதிபர் கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்திருந்தார். அதனை ஏற்று அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் வடகொரியாவுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.