பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது என பாகிஸ்தான் அரசு திடீர் முடிவு
May 21 2018 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் நாட்டால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள காஷ்மீர் பகுதி ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றும் ஆசாத் காஷ்மீர் என்றும் அழைக்கப்படுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு என்று தனி அதிபர், பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தாலும்கூட, அதன் முக்கிய நிர்வாக பொறுப்பை பாகிஸ்தான் அரசு தன்னிடம்தான் வைத்துக்கொண்டு உள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் அரசின் காஷ்மீர் விவகாரங்கள் துறை அமைச்சகம் இதைக் கவனிக்கிறது. இந்த பகுதிக்கு பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டும் என்று அவ்வப்போது அங்கு போராட்டங்களும் நடந்து வருகின்றன. இதே போன்று அங்கு உள்ள கில்ஜித் பல்திஸ்தான், பாகிஸ்தான் மாகாணம் போல இயங்கி வருகிறது. இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் சாகித் ககான் அப்பாசி தலைமை தாங்கினார். அதன் முடிவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும், கில்ஜித் பல்திஸ்தானுக்கும் கூடுதலான நிர்வாகம் மற்றும் நிதி அதிகாரத்தை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. பிராந்திய வளர்ச்சியை கருத்தில் கொண்டு, கில்ஜித் பல்திஸ்தான் பகுதிக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.