காஸா பகுதியில், ஹமாஸ் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தை ஒடுக்க, இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 10 பாலஸ்தீனர்கள் பலி - எல்லைப் பகுதியில் தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேல் ராணுவத்திற்கு ஐ.நா. வலியுறுத்தல்
Apr 7 2018 3:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஸா பகுதியில், ஹமாஸ் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தை ஒடுக்க, இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 10 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். இதனால், அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
பாலஸ்தீனம்-இஸ்ரேல் எல்லையில், ஹமாஸ் அமைப்பின் சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டு, இஸ்ரேல் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி பேரணியாகச் சென்றனர். பேரணியில் ஈடுபட்டவர்களை இஸ்ரேல் படையினர் தடுக்க முயற்சித்தனர். ஆனால், கூட்டம் கலையாமல் இருக்கவே, இஸ்ரேல் படையினர், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும், பாலஸ்தீனர்கள் வசிப்பிடங்களை நோக்கி குண்டு வீசியும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற தாக்குதலில் 16 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் எல்லையில் உள்ள தடுப்புகளை, போராட்டக்காரர்கள் உடைத்தெரிய முயன்றதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக, அந்நாட்டு ராணுவம் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் எல்லைப் பகுதியில் தாக்குதல்களை நிறுத்துமாறு அந்நாட்டு ராணுவத்தை ஐ.நா. சபை கேட்டுக் கொண்டுள்ளது.
பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், ஐ.நா. சபையில் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.