சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சகட்டம் - உயிருக்கு அஞ்சி, வீடுகள், உடைமைகளை விட்டுவிட்டு ஒரேநாளில் 50 ஆயிரம் பேர் சொந்த நாட்டை விட்டு வெளியேறிய அவலம்
Mar 17 2018 10:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரின் விளைவாக, ஒரே நாளில் 50 ஆயிரம் பொதுமக்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறிய சம்பவம் மனதை உறைய வைத்துள்ளது.
சிரியாவில், 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. சிரியா நாட்டு அதிபர் பஷர் அல் அசாத் அரசுக்கு எதிராக, கிளர்ச்சியாளர்கள் போர் தொடுத்து வருவதால், இதுவரை எந்தவொரு முடிவும் அங்கு எட்டப்படாமல் உள்ளது. கிளர்ச்சியாளர்களை அழிக்கும் நடவடிக்கையில் மேற்கொண்ட தாக்குதல்களில், இதுவரை சுமார் 4 லட்சம் பேர் அங்கு கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று, தெற்கு சிரியாவில் உள்ள ஆப்ரின் நகரில், துருக்கி படைகள் தாக்குதலில் ஈடுபட்டன. இந்த உச்சகட்ட தாக்குதலில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. உயிருக்கு பயந்து தங்களது வீடுகளையும், உடைமைகளையும் விட்டு அகதிகளாக செல்வதாக பொதுமக்கள் மனக்குமுறலுடன் தெரிவிக்கின்றனர்.
சிரியாவில், கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த போரினால் இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். சுமார் 61 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். 56 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.