சிரியா தாக்குதலுக்கு எதிர்ப்பு : அந்நாட்டு சிறுவன் போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் - குழந்தைகளை காப்பாற்றுமாறும் உருக்கத்துடன் வேண்டுகோள்
Feb 27 2018 3:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிரியாவில் நடைபெற்று வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டு சிறுவன் ஒருவன், போர் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டும் என்றும், குழந்தைகளை காப்பாற்றுமாறும் உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ள வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம், மீண்டும் சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் கடந்த ஒருவாரமாக தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றனர். ரஷியா மற்றும் சிரியா படையினர் நிகழ்த்தி வரும் இந்த தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதில் 120க்கும் மேற்பட்ட சிறுவர்களும் அடங்குவர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கிழக்கு கெளட்டாவில் அரசுப் படைகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து முகமத் நஜிம் என்ற பதினைந்து வயதுடைய சிறுவன் ஒருவன் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது பெயர் முகமத் நஜிம் என்றும், பஷார் அல் ஆசாத் செய்யும் குற்றங்களை உங்களிடம் விரிவாக கூறப்போகிறேன் என்றும் அந்த வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் இங்கு மிகுந்த பசியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற அச்சிறுவன் சிரியாவில் நடப்பதை வார்த்தைகளால் விவரிப்பது கடினம் என கூறினார். இங்கு இன அழிப்பு நடந்துக் கொண்டிருக்கிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் எனவும், இங்குள்ள அனைவரும் சிரிய அரசையும், ரஷ்யாவையும் போர் நிறுத்தம் கொண்டுவர வலியுறுத்தி வருகிறோம் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து வீடியோவில் பேசிய அச்சிறுவன், பஷார் அல் ஆசாத், புதின், கொமைனி தங்களது குழந்தைப் பருவத்தைப் கொல்கிறார்கள் என்றும் அங்குள்ள குழந்தைகளை காப்பாற்றுங்கள் எனவும், ஏற்கனவே மிகுந்த தாமதமாகிவிட்டது விரைவில் வாருங்கள் என கதறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைக்கண்டு பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.