வடகொரியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயார் - அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு
Jan 7 2018 1:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகொரிய அதிபர் கிம்ஜோங்குடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திடீரென அறிவித்துள்ளார். இவ்விரு தலைவர்களும் கடுமையான வார்த்தை போரில் ஈடுபட்டு வந்த நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரிய தீபகற்ப பகுதியில் அமைந்திருக்கும் வடகொரியா, தொடர்ந்து ஆயுத குவிப்பில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. குறிப்பாக அந்நாடு அணு ஆயுத சோதனை என்ற பெயரில் அவ்வப்போது பல்வேறு ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. இதனால் அண்டை நாடுகளான வடகொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் மட்டுமின்றி, சர்வதேச அரங்கிலும் பதற்றம் ஏற்பட்டது. எனினும் அமெரிக்காவுக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டில் இருந்து சற்றும் பின்வாங்க மாட்டோம் என வடகொரியா உறுதிபட கூறியுள்ளது. மேலும் அந்நாட்டின் மீது அணு ஆயுத போர் நடத்தவும் தயங்கமாட்டோம் என அறிவித்தது. அண்மையில் இதற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தங்களிடமும் மிக வலிமையான அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், அதனை மிக வேகமாக பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் தற்போது வடகொரியா அதிபர் கிம்ஜோங்கை நேருக்கு நேராக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதில் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும், பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த திடீர் மனமாற்றம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.