ஆசியான் அமைப்பின் 31-வது உச்சி மாநாடு ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் தொடக்கம் - இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலக தலைவர்கள் முக்கிய ஆலோசனை
Nov 13 2017 1:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஃபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தொடங்கியுள்ள ஆசியான் அமைப்பின் உச்சி மாநாட்டில், பிரதமர் திரு.நரேந்திரமோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். மேலும், இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து கடல்சார் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை நடத்துகின்றனர்.
ஆசியான் எனப்படும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் 31வது உச்சி மாநாடு ஃபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் திரு.நரேந்திரமோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 36 ஆண்டுகளுக்குப் பின்னர் ஃபிலிப்பைன்ஸ் சென்றுள்ள பிரதமர் திரு.நரேந்திரமோடி, இம்மாநாட்டுக்கு வருகை தந்துள்ள 18 நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்திய பெருங்கடலில், ஆதிக்கம் செலுத்த சீனா மேற்கொண்டுள்ள முயற்சிகளை தடுக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளும், குவாட் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. பிரதமர் உள்ளிட்ட 4 நாடுகளின் தலைவர்களும், கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்துகின்றனர். -சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த இதில் புதிய வியூகங்கள் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மணிலாவில் செயல்பட்டுவரும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்திற்கு பிரதமர் திரு.நரேந்திரமோடி சென்று பார்வையிட்டார். அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரிசி ஆராய்ச்சி சோதனைக் கூடத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.