ஆஸ்திரியா நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் : வாக்குப்பதிவு விறுவிறுப்பு
Oct 16 2017 12:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரியா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில், வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியா நாட்டில், 183 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு, நேற்று, தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருபவர், 31 வயதான இளம் தலைவர் செபாஸ்டியன் குர்ஸ். இவர், ஓ.வி.பி. என்றழைக்கப்படுகிற பழமைவாத மக்கள் கட்சியின் தலைவர் ஆவார். தற்போதைய கூட்டணி அரசில் வெளியுறவு அமைச்சராக இவர் பதவி வகிக்கிறார். இந்தக் கட்சிதான் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. இரண்டாவது இடத்துக்கு எப்.பி.ஓ. என்னும் தீவிர வலதுசாரி சுதந்திரா கட்சியும், சமூக ஜனநாயக கட்சியும் போட்டியிடுகின்றன.
தற்போது பிரதமராக உள்ள சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் கிறிஸ்டியன் கெர்ன் (51), செபாஸ்டியன் குர்ஸ்சின் பழமைவாத மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்துத்தான் ஆட்சி நடத்தி வருகிறார்.
இந்த கூட்டணியில் தொடர முடியாது என்று செபாஸ்டியன் குர்ஸ் போர்க்கொடி உயர்த்தியதன் விளைவாகத்தான், நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானது.
இந்தத் தேர்தலில் 64 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றிருந்தனர். காலையில் வாக்குப்பதிவு தொடங்கியபோது, வாக்குச்சாவடிகளில் குறைவான கூட்டம் காணப்பட்டதாகவும், பின்னர் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்து நின்று வாக்களித்ததாகவும், வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.