கண்கவர் வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகளுடன் பாகிஸ்தான் சுதந்திர தினம் கோலாகல கொண்டாட்டம் - தேசிய கொடியை ஏந்தியபடி பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்
Aug 14 2017 10:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினம், இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. நள்ளிரவில் கண்கவர் வாணவேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் சுதந்திர தினத்தை பாகிஸ்தானியர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி, இஸ்லாமாபாத்தில் உள்ள பாத்திமா ஜின்னா பூங்கா மற்றும் கராச்சி கடற்கரை பகுதிகளில் பாகிஸ்தான் விமானப்படையின் கண்கவர் வண்ண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாகிஸ்தான் சுதந்திர தினவிழாவில் சிறப்பு விருந்தினராக சீனாவின் துணை பிரதமர் வாங் யாங் கலந்து கொள்கிறார். இதற்காக பாகிஸ்தான் வந்துள்ள அவர், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி, பாகிஸ்தான் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ராணுவத்தினரும், போலீசாரும் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே, சுதந்திர தினத்தையொட்டி கராச்சி, லாகூர் உள்ளிட்ட நகரங்களில் அரசுக் கட்டடங்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இளைஞர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கையில் தேசியக்கொடியை ஏந்தியவாறு, தேசிய கீதத்தை பாடி, ஆரவாரத்துடன் சுதந்திர தினத்தை கொண்டாடினர். லாகூரில், வண்ணமிகு வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. வாகா எல்லையில், பேண்டு வாத்தியங்கள் முழங்க அந்நாட்டு தேசிய கொடியை ராணுவ தலைமை தளபதி Qamar Javed Bajwa ஏற்றிவைத்தார். ரிசால்பூரில் பாகிஸ்தான் விமானப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.