கத்தாருக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை திரும்பபெற வேண்டுமானால், அந்நாடு ஈரானுடன் தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 13 நிபந்தனைகளை 10 நாட்களுக்குள் நிறைவேற்ற வளைகுடா நாடுகள் அவகாசம்
Jun 24 2017 1:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தீவிரவாதத்துக்கு கத்தார் ஆதரவு அளிப்பதாக குற்றம் சுமத்திய சவுதி அரேபியா, அந்நாட்டுடனான ராஜ்ய உறவுகளை முறித்துக் கொண்டது. சவுதியை தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், எகிப்து, ஏமன் உள்ளிட்ட 7 நாடுகளும் கத்தார் நாட்டுடனான தங்கள் உறவுகளை துண்டித்துக்கொண்டன. அத்துடன், தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்துக்கொண்டன. இதனால் பெரும்பான்மையான உணவு பொருட்களுக்கு அண்டை நாடுகளையே சார்ந்திருந்த கத்தாருக்கு தற்போது பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்னையை சுமூகமாக முடிக்க கத்தார் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தாங்கள் சொல்லும் 13 கோரிக்கைகளை 10 நாட்களில் நிறைவேற்றினால், கத்தார் மீதான நடவடிக்கை திரும்பபெறப்படும் என வளைகுடா நாடுகள் அவகாசம் அளித்துள்ளன. கத்தாரை மையமாக கொண்டு செயல்படும் அல் ஜஸீரா செய்தி நிறுவனத்தை மூடுவது, ஈரானுடனான தூதரக உறவை முறித்துக்கொள்வது, கத்தாரில் அமைக்கப்பட்டுவரும் துருக்கி நாட்டின் ராணுவத்தளப் பணிகளை நிறுத்துவது, தீவிரவாத அமைப்புக்களுக்கு வழங்கிவரும் ஆதரவை நிறுத்துவது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை கத்தார் நிறைவேற்ற, வளைகுடா நாடுகள் கால அவகாசம் வழங்கியுள்ளன. இந்நிலையில், சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் கோரிக்கைப்படி, கத்தாரில் அமைக்கப்பட்டுவரும் தங்கள் நாட்டின் ராணுவதளப் பணிகளை நிறுத்த முடியாது என துருக்கி தெரிவித்துள்ளது.