மெக்கா மசூதியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் முயற்சி மேற்கொண்டபோது குண்டுவெடித்து 11 யாத்ரீகர்கள் காயம் - ஒரு பெண் உள்பட 5 பேர் கைது
Jun 24 2017 4:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா மசூதியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் முயற்சி மேற்கொண்டபோது குண்டுவெடித்து 11 யாத்ரீகர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக ஒரு பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரமானது இஸ்லாமியர்களின் புனித தலமாக கருதப்படுகிறது. தற்போது ரமலான் மாதம் என்பதால், அங்கு லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் வழிபாட்டுக்காக குவிந்து வருகின்றனர். இந்நிலையில், மெக்கா மசூதியில் நடத்தப்படவிருந்த மிகப்பெரிய தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.
மசூதியில் போடப்பட்டுள்ள கடும் பாதுகாப்பு வளையத்தையும் மீறி தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகளுடன் உள்ளே நுழைய முயற்சித்தபோது, அவனை போலீசார் உடனடியாக சுற்றிவளைத்தனர். இதனையடுத்து, அவன் தன்னுடன் கொண்டு வந்த குண்டுகளை வெடிக்க செய்ததில், 11 யாத்ரீகர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக ஒரு பெண் உள்பட 5 பேரை கைது செய்து சவுதி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும், தீவிரவாதிகளின் மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையில் சவுதி அரேபியாவும் அங்கம் வகித்து வருகிறது. எனவே, மெக்கா மசூதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.