வடகொரிய விவகாரம், ஒரு மிகப்பெரிய போரில் தான் முடியும் - இருப்பினும் சமாதானமான முறையில் தீர்வு காண விருப்பம் என டிரம்ப் உறுதி
Apr 29 2017 12:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகொரிய விவகாரம், ஒரு மிகப்பெரிய போரில் முடிவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும், இருப்பினும் சமாதானமான முறையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இதன் காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. இருப்பினும், தனது நிலையில் பின்வாங்காமல், தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு ராணுவ நடவடிக்கை தான் தீர்வு என்ற ஐ.நா.வின் முடிவு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யாவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் Gennady Gatilov பாதுகாப்பு கவுன்சிலிடம், "வடகொரியா உடனான பேச்சுவார்த்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொருளாதார தடைகள் மட்டும் தீர்வல்ல" என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, இனியும் அணுகுண்டு சோதனையில் ஈடுபட்டால், பொருளாதார தடை விதிப்போம் என்று வடகொரியாவிடம் சீனா எச்சரித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் கூறி உள்ளார். வடகொரியா விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி ஏற்று 100-வது நாளை எட்டியுள்ள நிலையில், 'ராயிட்டர்ஸ்' செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், வடகொரிய விவகாரம், ஒரு மிகப்பெரிய போரில் முடிவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும், இருப்பினும் சமாதானமான முறையில்தான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புவதாகவும் தெரிவித்த டிரம்ப். ஆனால், அது மிகவும் கடினமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.