துருக்கியில் புரட்சி முயற்சியில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே இரவில் கைது
Apr 27 2017 9:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துருக்கியில், புரட்சி முயற்சியில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே இரவில் கைது செய்யப்பட்டனர்.
துருக்கி நாட்டில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 15-ம் தேதி, ராணுவத்தில் ஒரு பிரிவினர் புரட்சிக்கு முயற்சித்தனர். அந்தப் புரட்சியை மக்கள் ஆதரவுடன் அதிபர் எர்டோகன் முறியடித்தார்.
இந்தப் புரட்சிக்கு, துருக்கியை சேர்ந்த அமெரிக்கவாழ் மதகுரு ஃபெதுல்லா குலன்தான் காரணம் என்றும், அவர் பல்லாண்டு காலமாக ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு வந்தார் என்றும் பிரதமர் யில்டிரிம் குற்றம் சாட்டினார்.
புரட்சி முயற்சியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த 24-ம் தேதி இரவில், ஃபெதுல்லா குலன் ஆதரவாளர்கள் என கருதப்படுகிற ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன், துருக்கியில் அதிபர் எர்டோகன், பாராளுமன்ற ஆட்சிமுறையை அகற்றி விட்டு அதிபர் ஆட்சி முறையை கொண்டு வருவது தொடர்பாக நடத்திய கருத்து வாக்கெடுப்பு வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை அமைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.