மத்திய தரைக் கடல் பகுதியில் அகதிகளின் படகுகள் கவிழ்ந்து மூழ்கி விபத்து - 5 பேரின் உடல்கள் மீட்பு - 200-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என அச்சம்
Mar 24 2017 5:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இத்தாலிக்கு புகலிடம் தேடிச்சென்ற அகதிகளின் படகுகள், மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கிய விபத்தில், 200-க்கும் அதிகமானோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா, சிரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெளியேறி ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். சட்ட விரோதமாக படகுகளில் புறப்படும் அவர்கள், துருக்கி மற்றும் கிரீஸ் இடையே மத்திய தரைக்கடலில் வரும் போது கடல் சீற்றத்தால் தண்ணீரில் மூழ்கி உயிர் விடும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
இந்நிலையில், காற்றடைக்கப்பட்ட படகுகளில் அகதிகள் ஏராளமானோர் மத்திய தரைக்கடலில் பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்களது படகுகள் லிபியா கடற்பகுதியில் வந்தபோது, அவற்றில் இருபடகுகள் திடீரென கடலில் மூழ்கின. அந்த படகுகளில் 200-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் இத்தாலி கடற்படையினர் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. அவர்கள் அனைவரும் கடலில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தப் படகுகள் அனைத்தும் லிபியாவின் கடத்தல் கும்பலிடமிருந்து பெறப்பட்டதாக தெரியவந்துள்ளது.