ஈராக்கின் மொசுல் நகரை ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கும் போரில், சுமார் 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. சபை தகவல்
Dec 2 2016 10:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈராக்கின், மொசுல் நகரை ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கும் போரில், சுமார் 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
ஈராக்கின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான மொசுல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்துள்ளனர். அந்நகரை மீட்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ள ஈராக் ராணுவம், தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் போரை நடத்தி வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக, அமெரிக்க ராணுவமும், குர்து படையினரும் செயல்பட்டு வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அங்கு கடும் சண்டை நடைபெற்று வருகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகள், பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதால், இந்தச் சண்டையில் அப்பாவி மனித உயிர்களும் பலியாகவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
மொசுலின் பெரும்பாலான பகுதிகள், தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் ஆயிரத்து 959 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பொதுமக்களில், 926 பேர் பலியாகியுள்ளதாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
இதனிடையே, மொசுல் நகர மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், இந்தப் போர் மேலும் சில மாதங்கள் நீடிக்கும் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், மொசுல் நகரின் பல பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருவதால், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த முகாம்களில் சுமார் ஒரு லட்சம் மக்கள் தங்கியுள்ளதாகவும், தற்போது தொடங்கியுள்ள குளிர்காலம், அவர்களுக்கு மிகப் பெரும் சவாலாக அமையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.