இந்தியாவின் பாரம்பரிய கலையான யோகாவிற்கு யுனெஸ்கோ நிறுவனம் அங்கீகாரம் - மனித இனத்திற்கு மிகவும் பயனளிக்கும் இக்கலையை போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றும் கருத்து
Dec 2 2016 2:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவின் பாரம்பரிய கலையான யோகா, ஜார்ஜியாவின் பழம்பெரும் எழுத்து வடிவம், எகிப்தின் பாரம்பரிய தற்காப்புக் கலை மற்றும் ஆக்சிஜன் முகமூடி இல்லாமல் தென்கொரிய பெண்கள் நீருக்குள் சென்று சிப்பி மீன்கள் சேகரிக்கும் பாரம்பரிய தொழில் உள்ளிட்டவை யுனெஸ்கோவின் பாரம்பரிய கலைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2008-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் புலப்படாத, பாரம்பரிய நிகழ்வுகள், மதச்சடங்குகள், சமூக நடைமுறைகள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு வருகிறது. இக்கலைகளை அழிந்துவிடாமல் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும், பாரம்பரியம் சார்ந்த உணர்வுகளை உயிர்ப்பிக்கும் வகையிலும் மேம்படுத்தும் நோக்கோடு உலக பாரம்பரிய அமைப்பான யுனெஸ்கோ மூலம் இக்கலைகளை பட்டியலிட்டு பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதன்படி, தென்கொரிய பெண்கள் ஆக்ஸிஜன் முகமூடி இல்லாமல் நீருக்குள் மூழ்கி சிப்பி மீன்கள் சேகரிக்கும் பாரம்பரிய தொழில் யுனெஸ்கோவின் புலப்படாத பாரம்பரிய கலைகள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதேபோல், இந்தியாவின் பண்டைய கலையான யோகாவும் யுனெஸ்கோவின் பாரம்பரிய கலைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. யோகாவில் இடம்பிடித்துள்ள ஆழ்ந்த தியானம், மூச்சுப் பயிற்சி, மற்றும் உடலசைவுகள் உள்ளிட்டவை மனித இனத்திற்கு மிகுந்த பயனளிக்கக் கூடியவை என்றும் எனவே இக்கலை பாதுகாக்கப்படுவது மிகவும் அவசியம் என்றும் யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
இதேபோல், அசர்பெய்ஜான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் பாரம்பரியமாக தயாரிக்கப்படும் ரொட்டி வகை, ஜார்ஜியாவின் பல்வேறு கலாச்சார மற்றும் சமூக செயல்பாடுகளை வெளிப்படுத்தும் வகையிலான எழுத்துருக்கள், எகிப்தின் பாரம்பரிய தற்காப்புக்கலையான கம்பு சண்டை உள்ளிட்டவையும் யுனெஸ்கோவின் பாரம்பரிய கலைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.