அதிபர் தேர்தலில் தில்லுமுல்லு செய்ய ஜனநாயகக் கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு : கருத்துக்கணிப்பில் தனக்கு கிடைத்த வெற்றியை ட்ரம்ப் ஏற்க மறுப்பதாக ஹிலரி புகார் - சூடுபிடித்துள்ள அமெரிக்க தேர்தல் களம்
Oct 26 2016 6:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபர் தேர்தலில் தில்லுமுல்லு செய்ய ஜனநாயகக் கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான தேர்தல், அடுத்த மாதம் 8-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் திருமதி ஹிலரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்-ம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தெற்கு ஃப்ளோரிடாவில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு ஹிலரி கிளிண்டனுக்கு தங்கள் ஆதரவைத் வெளிப்படுத்தினர்.அமெரிக்கா இப்போதுள்ள நிலையில் அதிபர் பதவிக்கு அவர்தான் பொருத்தமானவர் என்று தெரிவித்தனர்.
ஹிலரி கிளிண்டனும், தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, டொனால்ட் ட்ரம்ப்-உடன் நடத்திய 3-வது மற்றும் கடைசிக்கட்ட நேரடி தொலைக்காட்சி விவாதமானது, தனக்கு முன்னதாகவே கிடைத்த பிறந்தநாள் பரிசு என்று தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விவாதத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தனக்கு கிடைத்த வெற்றியை டொனால்ட் ட்ரம்ப் ஏற்க மறுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஜனநாயக கட்சியினர் தேர்தலின்போது வாக்குச் சாவடிகளில் தில்லுமுல்லு செய்ய திட்டமிட்டுள்ளதாக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் ஹிலரி கிளிண்டனின் தனிப்பட்ட இணையதள சர்வரை பயன்படுத்தியது தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஒபாமா மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.