குடியரசுக் கட்சிக்கு எதிராக பொய்யான கருத்துக் கணிப்புகளை வெளியிடும் ஊடகங்கள் - டொனால்ட் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு
Oct 25 2016 4:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தனக்கு எதிராக பொய்யான கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதற்கு ஆதரவாக ஊடகங்கள் செயல்படுவதாகவும் குடியரசுக் கட்சி வேட்பாளர் Donald Trump குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே டிரம்ப்புக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் குறிப்பிட்டுள்ளார்.
ஃப்ளோரிடா மாகாணம் Boynton Beach என்ற இடத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட Donald Trump, தனது கட்சி வெற்றி இலக்கை நோக்கி முன்னேறி வரும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டைப் போடும் வகையில், பொய்யான கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுவதாக குற்றம்சாட்டினார்.
இதே மாகாணத்தில் St. Augustine என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பங்கேற்று பேசிய டிரம்ப், மின்னஞ்சல்களை அழித்தது தொடர்பான விசாரணையை மேற்பார்வையிட்ட அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரியின் மனைவிக்கு 6 லட்சம் டாலருக்கும் அதிகமாக லஞ்சம் கொடுத்து நடவடிக்கையில் இருந்து ஹிலரி கிளிண்டன் தப்ப முயற்சித்ததாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
இந்நிலையில், New Hampshire மாகாணம் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஹிலரி கிளிண்டன், அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே தோல்வியை டிரம்ப் ஒப்புக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினர் குழப்பத்தில் உள்ளனர்.