பயங்கரவாத சந்தேகத்திற்குரிய 5,100 பேரின் வங்கிக் கணக்குகளை முடக்கியது பாகிஸ்தான் - பதான்கோட் தாக்குதல் தீவிரவாதி மசூத் அசாரின் வங்கிக் கணக்கும் முடக்கம்
Oct 25 2016 4:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பதான்கோட் தாக்குதல் தீவிரவாதி மசூத் அசார் உள்ளிட்ட பயங்கரவாத சந்தேகத்திற்குரிய 5 ஆயிரத்து 100 பேரின் வங்கிக் கணக்குகளை பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது.
பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் 1997-ன் படி, பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 1200 பேரின் வங்கிக் கணக்குகளை முதற்கட்டமாக அந்நாட்டு தேசிய வங்கி முடக்கியது. இந்நிலையில், 4வதாக வெளியான பட்டியலின்படி, 5 ஆயிரத்து 100 பேரின் வங்கிக் கணக்குகள் தற்பொழுது முடக்கப்பட்டுள்ளன. இந்த கணக்குகள் அனைத்திலும் 40 கோடி ரூபாய்க்கும் மேல் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இதில் பதான்கோட் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இப்பட்டியலின்படி, கைபர்-பக்துன்க்வா பகுதியைச் சேர்ந்த 3 ஆயிரத்து 78 பேர், பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியைச் சேர்ந்த ஆயிரத்து 443 பேர், சிந்து பகுதியைச் சேர்ந்த 226 பேர், பலுச்சிஸ்தான் பகுதியைச் சேர்ந்த 193 பேர், பல்தீஸ்தான் பகுதியைச் சேர்ந்த 106 பேர், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாத்தில் 27 பேர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 26 பேர் என 5 ஆயிரத்து 96 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.