பாகிஸ்தான் தீவிரவாதிகள் அணு ஆயுத தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தும் அபாயம் - அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் எச்சரிக்கை
Oct 1 2016 11:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் தீவிரவாதிகள் அணு ஆயுதங்களை கைப்பற்றி, தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் எச்சரித்துள்ளார். இத்தகவலை அந்நாட்டின் பிரபல நாளேடான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
ஜனநாயக கட்சியின் வேட்பாளராக, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில், பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள், அந்நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை கைப்பற்றும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார். அணு ஆயுதங்களை பயன்படுத்தி, தீவிரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தலாம் என்றும் அவர் அச்சம் தெரிவித்ததாக, பிரபல அமெரிக்க நாளேடான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, அணு ஆயுதங்களை பிரயோகிப்பதாக மிரட்டும் பாகிஸ்தானுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா.வால் தீவிரவாத அமைப்புகள் என பட்டியலிடப்பட்ட குழுக்கள் மீது பாகிஸ்தான் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை ஒடுக்க பாகிஸ்தான் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ரஷ்யாவும் கருத்து தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காஜா முகம்மது ஆசிப் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா மீது அணுகுண்டுகளை வீசுவோம் என எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.