அமெரிக்க அதிபர் தேர்தலில் அனல்பறக்கும் பிரச்சாரம் - டொனால்ட் டிரம்ப் தனது தொழிலை கியூபா நாட்டில் விரிவுப்படுத்திட சட்டத்தை மீறுவதாக ஹிலரி கிளிண்டன் குற்றச்சாட்டு : ஊழல் மிகுந்த ஹிலரி கிளிண்டனின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பணம் தருவது யார்? என டொனால்ட் டிரம்ப் கேள்வி
Sep 30 2016 3:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரும், பிரபல தொழில் அதிபருமான டொனால்ட் டிரம்ப் தனது தொழிலை கியூபா நாட்டில் விரிவுப்படுத்திட அமெரிக்க சட்டத்தை மீறுவதாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களான குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் ஹிலரி கிளிண்டன் ஆகியோர் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹிலரி கிளிண்டன் பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், அமெரிக்காவின் கொள்கைகளையும், சட்டதிட்டத்தையும் காற்றிலே பறக்கவிட்டு கியூபாவில் தனது தொழிலை விரிவுப்படுத்த டிரம்ப் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், New Hampshire மாகாணம் Bedford என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய டொனால்ட் டிரம்ப், தன்னை எதிர்த்து போட்டியிடும் ஹிலரி கிளிண்டன் ஊழல் மிகுந்தவர் என்றும், அவருடைய தேர்தல் பிரச்சாரத்திற்கு பணம் அளிப்பவர் யார் என்பதை வாக்காளர்கள் ஆராய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அதிபர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. டிரம்ப்பைவிட ஒரு சதவீதம் மட்டுமே ஹிலரி கிளிண்டன் பெற்று முன்னிலையில் இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வரும் 9-ம் தேதி செயின்ட் லூயிஸ் நகரில் 2-வது நேரடி விவாதமும், 19-ம் தேதி Nevada மாகாணம் பாரடைஸ் நகரில் 3-வது மற்றும் இறுதி நேரடி விவாதமும் நடந்து முடிந்த பின்னர் நிலைமைகள் மாறக்கூடும் என கருதப்படுகிறது.