அமெரிக்க அதிபர் தேர்தல் : குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டனுக்கும் இடையே 4 சதவிகித வாக்குகள் வித்தியாசம் மட்டுமே உள்ளதாகவும் தகவல்
Aug 27 2016 8:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டனுக்கும் இடையே 4 சதவிகித வாக்குகள் வித்தியாசம் மட்டுமே உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட ஆளும் ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அதிபர் பதவியை பிடிக்க ஹிலரியும், டிரம்பும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆரம்பத்தில் ஆவேசமாக பேசிய டொனால்ட் டிரம்பின் பிரச்சாரம், அவரது கட்சியை சேர்ந்தவர்களையே முகம் சுளிக்க வைத்து, அவருடைய செல்வாக்கை சரிய வைத்தது. இதனையடுத்து, சுதாரித்துக் கொண்ட டிரம்ப், தனது பிரச்சார உத்தியை மாற்றிக்கொண்டார். இதுவரை, தவறாக பேசியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். டிரம்பின் இந்த மாற்றத்திற்கு பின்னர், மக்கள் மத்தியில் அவருக்கான ஆதரவு அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும், தற்போது டிரம்புக்கும், ஹிலரி கிளிண்டனுக்கும் இடையே 4 சதவிகித வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது என்றும், தகவல்கள் வெளியாகியுள்ளன.