நைஜீரிய ராணுவம் நடத்திய அதிரடி வான் தாக்குதல் - பொகோ ஹராம் தீவிரவாத தலைவர் உட்பட நூற்றுக்கணக்கானோர் பலி
Aug 24 2016 7:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நைஜீரியாவில் அந்நாட்டு விமானப்படை நடத்திய வான் தாக்குதலில் பொகோ ஹராம் தீவிரவாத தலைவர் அபுபக்கர் ஷேகாவ் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆஃப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் பொகோ ஹராம் என்ற பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. மதம் சார்ந்த கோட்பாடு அடிப்படையில் புதிய அரசை ஏற்படுத்தும் நோக்கில் அந்த அமைப்பினர் ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது நடத்தப்படும் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல், நைஜீரிய ராணுவம் திணறி வருகிறது. இதனால் அண்மைக்காலமாக நைஜீரிய அரசு பொகோ ஹராம் தீவிரவாதிகளின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அந்நாட்டில் உள்ள சாம்பிசா வனப்பகுதியை விமானப்படையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், தற்போது நடத்தப்பட்டுள்ள அதிரடி வான் தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக நைஜீரிய விமானப்படைத் தளபதி சாதிக் அபுபக்கர் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில் பொகோ ஹராம் இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் ஷெகாவ் மற்றும் வேறு சில முக்கிய நபர்களும் கொல்லப்பட்டிருப்பதாக நைஜீரிய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நைஜீரியாவில் பொகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.