இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூரின் முன்னாள் அதிபருமான எஸ்.ஆர்.நாதன் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் - 26ம் தேதி இறுதி சடங்குகள் நடைபெறும் என்று அறிவிப்பு
Aug 23 2016 6:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூரின் முன்னாள் அதிபருமான திரு. எஸ்.ஆர்.நாதன் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 92.
சிங்கப்பூரின் அதிபராக கடந்த 1999 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இருமுறை பதவி வகித்த, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரு. எஸ். ஆர். நாதன் நேற்று காலமானார். கடந்த மாதம் 31ம் தேதி உடல் நலக்குறைவால் சிங்கப்பூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைபிரிவில் வைக்கப்பட்டிருந்த அவர் கடந்த 3 வாரங்களாக கோமாவில் இருந்த நிலையில், நேற்று அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு மனைவி, மகள், மகன் மற்றும் 3 பேரக்குழந்தைகள் உள்ளனர்.
திரு. எஸ். ஆர். நாதன், சிங்கப்பூர் அதிபர் பதவியை ஏற்பதற்கு முன்னர் மலேசியாவுக்கான உயர் கமிஷனர் மற்றும் அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். இவருக்கு வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்காக, இந்திய அரசு வழங்கும் பர்வாசி பாரதிய சன்மான் விருது கடந்த 2012-ம் ஆண்டு வழங்கப்பட்டது.
மறைந்த எஸ்.ஆர்.நாதனுக்கு இறுதி சடங்குகள் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலிக்காக வியாழக்கிழமை முதல் வைக்கப்பட உள்ளது. முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மறைவால், இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை சிங்கப்பூர் அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி பாதியில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.