ஐரோப்பிய யூனியனில் இருந்து தொடர்ந்து நீடிப்பதா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்க இங்கிலாந்தில் இன்று பொதுவாக்கெடுப்பு - பெரும்பாலான மக்கள் வெளியேற விரும்புவதாக கருத்துக்கணிப்பில் தகவல்
Jun 23 2016 7:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிப்பதா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்க இங்கிலாந்து நாட்டில் இன்று பொதுவாக்கெடுப்பு நடைபெறுகிறது.
கடந்த 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில் உள்ள ஃபிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், இங்கிலாந்து உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளைச் சேர்ந்தவர்கள், அந்த அமைப்பில் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி எளிதாக சென்று கல்வி கற்கவும், தொழில் தொடங்கவும், வேலைவாய்ப்புகளை பெறவும் முடியும். இதன் காரணமாக, ஐரோப்பா யூனியனில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்தில் அதிக அளவில் குடியேற தொடங்கியதால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அந்நாட்டு மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது.
இதனையடுத்து, ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிப்பதா? வேண்டாமா என்பதை அறிய பொதுவாக்கெடுப்பு நடத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்தது. அதன்படி, இங்கிலாந்தில் இன்று பொதுவாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்கும் இந்த வாக்குப்பதிவு இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, நாளை முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து நீடிக்கும் வகையில், வாக்களிக்குமாறு அந்நாட்டு மக்களை பிரதமர் டேவிட் கேமரூன் கேட்டுக்கொண்டுள்ளார். எனினும், ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற 45 சதவீத மக்கள் விரும்புவதாகவும், 44 சதவீத மக்களே அந்த அமைப்பில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என கருதுவதாகவும் தற்போது வெளியாகி உள்ள கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.