பாகிஸ்தானுக்கு F-16 ரக போர் விமானங்களை விற்பனை செய்யும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு அந்நாட்டின் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு - இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை
Apr 28 2016 11:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், பாகிஸ்தானுக்கு எஃப் 16 ரக போர் விமானங்களை விற்கும் முடிவை, அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிபர் ஒபாமாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அமெரிக்கா, 8 அதிநவீன எஃப் 16 ரக போர் விமானங்களை சுமார் 4 ஆயிரத்து 620 கோடி ரூபாய்க்கு விற்க, பாகிஸ்தானுடன் கடந்த மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதுகுறித்து, அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் ஒபாமா, பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது என்றும், அவற்றின் உதவியால் பாகிஸ்தான் அந்நாட்டில் பரவி வரும் தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்த அமெரிக்க நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய குடியரசுக் கட்சி உறுப்பினர் Matt Salmon, ஏற்கெனவே அமெரிக்கா பெருமளவிலான ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ள போதிலும், அவற்றால் தீவிரவாதத்தை அழிக்க முடியவில்லை - மாறாக தீவிரவாதத்தை அதிகரிக்கவே செய்துள்ளன என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் அண்மையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தடைபட்டுள்ளதால், அந்நாடுகளின் நட்புறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா வழங்கிய போர் விமானங்களை, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். அவரது கருத்தை நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் ஆதரித்தனர். இந்த எதிர்ப்பை கருத்தில்கொண்டு அதிபர் ஒபாமா, எஃப் 16 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.