சிரியாவில் 5 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர 17 நாடுகள் உடன்பாடு - ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அறிவிப்பு
Feb 13 2016 7:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர 17 நாடுகள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் அதிபர் பாஷார் அலி அசாத்துக்கு எதிராக 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், சுமார் 2 லட்சம் பேர் உயிரிழந்தனர். ஒரு கோடிக்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில், உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர ஜெர்மனியின் மூனிச் நகரில் 17 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சிரியாவில் போர் நிறுத்தம் செய்ய அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டன. அதேநேரம், சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போரால் சிதைந்துள்ள சிரியாவுக்கு மனிதநேய உதவிகளை விரைவுபடுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கலந்துகொண்டன.
இதனிடையே, இந்த உடன்பாட்டை மீறி ரஷ்யப் படைகள் சிரியா மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன. போர் நிறுத்த உடன்பாடு அமலுக்கு வர ஒருவார காலம் பிடிக்கும் என்பதால், அதற்குள் அரசு ஆதரவுப் படைகளுடன் இணைந்து தீவிரவாதிகளை அழிக்க ரஷ்யா உறுதி பூண்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.