உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளை மீறி தொலைத்தூர இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய ராக்கெட்டை சோதனை நடத்தியுள்ள வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் - புதிய பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை
Feb 8 2016 9:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீண்ட தொலைவுக்குச் சென்று இலக்கினைத் தாக்கக்கூடிய ராக்கெட்டை சோதனை நடத்தியுள்ள வடகொரியாவுக்கு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. புதிய பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகொரியாவின் சர்ச்சைக்குரிய ராக்கெட் சோதனையைத் தொடர்ந்து, நியூயார்க்கில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. வடகொரியாவின் இத்தகைய செயலைக் கண்டிக்கும் வகையில், புதிய பொருளாதார தடை விதிக்க ஏதுவாக, விரைவில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
செயற்கைக்கோளை அனுப்பி சோதனை நடத்தியதாக வடகொரியா கூறிக்கொண்டாலும், கண்டம்விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை அந்நாடு சோதனை நடத்தியிருப்பதாக, வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதத்தில் வடகொரியா நான்காவது அணுஆயுத சோதனையை நடத்தியதும், தற்போது நடத்தியுள்ள செயற்கைக் கோள் சோதனையும், ஐ.நா. விதிமுறைகளுக்கு எதிரானது என்று பாதுகாப்புக் கவுன்சில் குறைகூறியுள்ளது.
பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவரும், வெனிசுலாவுக்கான ஐ.நா தூதருமான ரஃபேல் ரமிரேஸ், வடகொரியாவின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறினார். வடகொரியாவுக்கு எதிராக, புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. எனினும், வடகொரியாவின் நட்புநாடான சீனா, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.