விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, வேறு நாடுகளுக்கு பயணிக்க முடியாத வகையில், பிரிட்டன் தடுத்து வைத்திருப்பது நியாயமற்றது : ஐ.நா. குழு தீர்ப்பு
Feb 5 2016 5:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, வேறு நாடுகளுக்கு பயணிக்க முடியாத வகையில், பிரிட்டன் தடுத்து வைத்திருப்பது நியாயமற்றது என ஐ.நா. குழு அசாஞ்சேவுக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது.
ஸ்வீடன் நாட்டைச்சேர்ந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன்அசாஞ்சே, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் லட்சக்கணக்கான கோப்புகளை தனது ஊடக இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். இவரை கைதுசெய்ய அமெரிக்கா பல்வேறு வகையில் முயன்று வரும் நிலையில், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்வீடன்அரசும் இவரை நாடு கடத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில, கடந்த 2012ம் ஆண்டு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் அவர் தஞ்சம் புகுந்தார். அவரை கைதுசெய்ய பிரிட்டஷ் போலீசார் காத்திருக்கும் நிலையில், தான் கடந்த மூன்றரை ஆண்டுகளாக சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் ஐ.நா.வில் கடந்த 2014ம் ஆண்டு முறையீடு செய்திருந்தார்.
இந்த புகார் குறித்து தங்கள் முடிவுகளை இன்று அதிகாரப்பூர்வமாக ஐ.நா. வெளியிடுவதாக குறிப்பிட்டிருந்த நிலையில், ஐ.நா. விசாரணைக்குழு அசாஞ்சேவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளதாக லண்டனைச் சேர்ந்த பி.பி.சி. செய்திநிறுவனம் அதிகாரப்பூர்வமற்ற தகவலை வெளியிட்டு உள்ளது.
ஐ.நா.வின் அறிவிப்பு பிரிட்டன் மற்றும் ஸ்வீடன் நாட்டு அதிகாரிகளை கட்டுப்படுத்தாது என்பதால் அசாஞ்சேயை கைது செய்யும் அனைத்து முயற்சிகளையும் பிரிட்டஷ் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.