அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எதிராக ஹிலரி கிளிண்டன் போர்க்கொடி - பசிபிக் வர்த்தக உடன்பாட்டுக்கு கடும் எதிர்ப்பு
Oct 9 2015 11:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபர் ஒபாமா முயற்சியில் உருவான பசிபிக் வர்த்தக உடன்பாட்டுக்கு எதிராக ஹிலரி கிளிண்டன் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தீவிர முயற்சியின் காரணமாக பசிபிக் நாடுகளான கனடா, மெக்சிகோ, பெரு, சிலி, ஜப்பான், வியட்நாம், புருனே, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த 5-ம் தேதி தாராள வர்த்தக உடன்பாடு ஏற்பட்டது. பலகட்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர் இந்த உடன்பாடு கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், 12 நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தகத்துக்கு வாய்ப்பாக அமைவதால் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியில் களம் இறங்கியுள்ள அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளிண்டன், இந்த ஒப்பந்தத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்துக்கு தனது ஆதரவு இல்லை என்றும், அமெரிக்க மக்களுக்கு வேலைவாய்ப்பினை பெருக்கி, ஊதியத்தை உயர்த்தும், தேச பாதுகாப்பை முன்னேற்றுகின்ற வகையிலான வர்த்தக உடன்பாடுதான் வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அமெரிக்காவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அதிபர் ஒபாமாவின் முடிவுகளுக்கு எதிராக, அதே கட்சியைச் சேர்ந்த ஹிலரி கிளிண்டன் பேசி வருவது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.