பிரசில் நாட்டில் சிறைச்சாலையில் கைதிகள் நடத்திய போராட்டம் - கலவரமாக மாறியதால் பதற்றம்
Oct 7 2015 7:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரசில் நாட்டில் Parana மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் வசதி குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கைதிகள் பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, சிறைச்சாலை வளாகத்தில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.
பிரசில் நாட்டின் Parana மாநிலத்தைச் சேர்ந்த Londrina என்ற இடத்தின் அமைந்துள்ள சிறைச்சாலையில் 928 கைதிகளை மட்டுமே சிறை வைக்க முடியும். ஆனால், ஆயிரத்து 140 பேர் இந்த சிறையில், அடைக்கப்பட்டனர். மேலும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கைதிகள் பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டனர். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கிய அவர்கள், பல இடங்களில் தீயிட்டனர். மேலும், சிறை ஊழியர் ஒருவரை பணயக் கைதியாக பிடித்து வைத்துக்கொண்டு, அவரை சிறைச்சாலையின் கூரை மீதிருந்து கீழே வீசிவிடுவோம் என மிரட்டல் விடுத்தனர். தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், பணயக் கைதிகளை கொன்றுவிடப்போவதாகவும், எச்சரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கைதிகளை சிறைக் காவலர்கள் அமைதிப்படுத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.