முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் மறைவுக்கு, உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் - மிகப்பெரிய மாமேதையை உலக மக்கள் இழந்து விட்டதாக, ஒபாமா புகழாரம்
Jul 30 2015 6:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பிரிட்டன், பூடான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அதிகாரப்பூர்வ அரசு மாளிகைகளில், அந்நாடுகளின் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.
டாக்டர் அப்துல் கலாம் மறைவையொட்டி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
கோடான கோடி இந்தியர்களின் உத்வேகமாக விளங்கியவர் டாக்டர் அப்துல் கலாம் என்றும், அமெரிக்கா - இந்தியா இடையே நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்தியவர் என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ மாளிகைகளில், பிரிட்டிஷ் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
இதேபோல், பூடான் தலைநகர் திம்புவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், அந்நாட்டு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் "Google" இணையதளம், மறைந்த அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தனது முகப்பு பக்கத்தில், கருப்பு நிற பேண்ட் இடம்பெறச் செய்துள்ளது. அதன்மீது மவுஸ் கர்சரை வைத்தால், "கலாமின் நினைவுகள்" என வாசகம் கணினித் திரையில் தோன்றுகிறது.
வெளிநாடுகளில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்கள் தங்களது இல்லங்களில் டாக்டர் அப்துல் கலாமின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.