பொருளாதார நெருக்கடியில் இருந்து கிரீஸ் நாடு மீளுமா? - ஐரோப்பிய யூனியனின் நிபந்தனைகளை ஏற்பது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நாளை மறுநாள் வாக்கெடுப்பு
Jul 3 2015 7:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள கிரீஸ், ஐரோப்பிய யூனியனின் நிபந்தனைகளை ஏற்பதா? வேண்டாமா? என்பது குறித்த பொது வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் திட்டமிட்டபடி நாளைமறுநாள் நடைபெறும் என பிரதமர் Alexis Tsipras தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 2008-ம் ஆண்டு மையம் கொண்ட உலகப் பொருளாதார நெருக்கடியின் தொடர் விளைவுகளால், கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள் மீள முடியாத கடன் வலையில் சிக்கியுள்ளன. பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள கிரீஸ் நாட்டிற்கு உதவ வேண்டுமென்றால், அந்நாட்டில் ஏற்னெவே அமலில் உள்ள ஓய்வூதியம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கான நிதியுதவியை குறைக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் நிபந்தனை விதித்தது. ஆனால் இதனை ஏற்க கிரீஸ் அரசு மறுத்துவிட்டது. இதனால், கிரீஸ் நாட்டில் உள்ள வங்கிகளுக்கு அவசர நிதியுதவி அளிக்கும் சேவையை, ஐரோப்பிய மத்திய வங்கி அதிரடியாக நிறுத்திக்கொண்டது.
இதன்காரணமாக கிரீஸ் வங்கிகள் அனைத்தும் திவாலாகிவிடுவதுடன், அந்நாடே ஒட்டுமொத்தமாக பொருளாதார சீர்குலைவுக்கு உள்ளாக நேரிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 28-ம் தேதி நடைபெற்ற கிரீஸ் நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தில், ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பொதுவாக்கெடுப்பு நடைபெறும் என பிரதமர் Alexis Tsipras தெரிவித்துள்ளார்.
இதனிடையே திடீர் திருப்பமாக, பொதுவாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அதென்ஸ் நகரின் Syntagma சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Alexis Tsipras தலைமையிலான Syriza இடதுசாரி அரசு, கிரீஸ் மக்களை திவாலடைய செய்துவிட்டதாக கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.