பிலிப்பைன்ஸ் நாட்டில் ராட்சத அலையில் சிக்கி கப்பல் கவிழ்ந்ததில் 38 பேர் பலி - 33 பேரை காணவில்லை என தகவல்
Jul 3 2015 7:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிலிப்பைன்ஸ் நாட்டில், ராட்சத அலையில் சிக்கி, கப்பல் கவிழ்ந்ததில் 38 பேர் உயிரிழந்தனர். 33 பேரை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Ormoc நகர துறைமுகத்தில் இருந்து 200 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் சிறிய கப்பல் புறப்பட்டது. சில நிமிடங்களில் கடலில் பொங்கி எழுந்த ராட்சத அலையில் சிக்கி நிலைகுலைந்த அக்கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், மீட்பு குழுவினர் விரைந்து சென்று 118 பேரை காப்பாற்றினர். ஆயினும் 38 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்ததாகவும், காணாமல்போன 33 பேரை தேடி வருவதாகவும் கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மீட்கப்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். விபத்துக்குள்ளான சிறிய கப்பலில் பயணம் செய்தவர்கள் அனைவரும், தங்களுடைய நிலங்களில் விளைந்த பொருட்களையும், மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் Camotes தீவில் விற்பனை செய்வதற்காக செல்லும் வழியில் விபத்தை சந்திக்க நேரிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து தொடர்பாக கப்பல் கேப்டன் மற்றும் ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.