அமெரிக்கா, கியூபா நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக இருந்த மோதல் முடிவுக்கு வந்தது - இரு நாடுகளும் அதிகாரப்பூர்வ தூதரக உறவை தொடங்கின
Jul 2 2015 7:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
50 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர், அமெரிக்காவும், கியூபாவும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளன. அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ இருவரும் இதற்கான அறிவிப்பை ஒரேநேரத்தில் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கா - கியூபா இடையே, ஏறத்தாழ 50 ஆண்டுகாலமாக நல்லுறவு இல்லை. 1961-ம் ஆண்டு கியூபாவில் ஏற்பட்ட புரட்சியைத் தொடர்ந்து இருநாடுகளும் பரம எதிரிகளாக இருந்து வந்தன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ இருவரும், கடந்த டிசம்பர் மாதம் நியூயார்க்கில் சந்தித்து பேசியபோது, இருநாடுகளுக்கும் இடையே இருந்துவந்த மனக்கசப்பை மாற்றி, நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென முடிவு செய்தனர். இதனையடுத்து, இருநாடுகளும் நல்லுறவுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இந்த சமரச நடவடிக்கைகளின் இறுதிக்கட்டமாக இருநாடுகளிடையே தூதரக உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள தற்போது முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க தூதரகம் கியூபா தலைநகர் ஹவானாவில் திறக்கப்பட உள்ளது. இதேபோன்று கியூபாவின் தூதரகம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமையவிருக்கிறது. இந்த இருநாட்டு தூதரகங்களும், வரும் 20-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னோடியாக, அமெரிக்க அதிகாரி, கியூபாவின் துணை வெளியுறவு அமைச்சர் மெர்சிலினோ மெடினோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இருநாட்டு அதிபர்களின் கடிதங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.