வடகொரியா ஏவுகணை சோதனையால் தொடரும் அச்சுறுத்தல் - பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியா ஏவிய ஏவுகணை
Oct 5 2022 3:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஏவிய ஏவுகணை, சொந்த நாட்டு விமான படைதளத்தில் விழுந்து வெடித்ததால், தென்கொரிய விமானப்படையினர் அதிர்ச்சியடைந்தனர்.
அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாகவும், வடகொரியா, அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட ஏவுகணையை, வடகொரியா நேற்று சோதனை செய்தது. வடகொரியாவிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை, ஜப்பானின் வான் பரப்பை கடந்து சென்று பசுபிக் கடலில் விழுந்தது. இந்த ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து தென்கொரியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புப் படையினர் உஷார் படுத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தென்கொரியா, அமெரிக்காவுடன் இணைந்து இன்று ஏவுகணை சோதனை நடத்தியது. அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான 4 ஏவுகணைகள், தென்கொரியாவில் தயாரிக்கப்பட்ட 2 ஏவுகணைகள் என மொத்தம் 6 ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டன. தென்கொரியா ஏவிய ஏவுகணை
ஒன்று தோல்வி அடைந்தது. சொந்த நாட்டின் விமான தளத்திலேயே அது வெடித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, வடகொரியாவின் ஏவுகணை சோதனை, சர்வதேச ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த செயலை கண்டிப்பதாகவும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.