ஹோண்டுராசின் புதிய அதிபராக சியோமாரா காஸ்ட்ரோ தேர்வு : 12 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றி இடதுசாரி கட்சி அசத்தல்
Dec 2 2021 11:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லத்தீன் அமெரிக்க நாடான ஹோண்டுராசில் முதல் பெண் அதிபராக சியோமாரா காஸ்ட்ரோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹோண்டுராசில் கடந்த 12 ஆண்டுகளாக வலதுசாரி கட்சியான தேசிய கட்சியின் ஆட்சி நடைபெற்றது. இதனிடையே கடந்த மாதம் 28-ந் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் அதிபர் பதவிக்காக ஆளும் தேசிய கட்சியின் சார்பில் நஸ்ரி அஸ்புராவும், அவரை எதிர்த்து இடதுசாரி கட்சியான சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மானுவல் ஜெலயாவின் மனைவியான சியோமாரா காஸ்ட்ரோவும் போட்டியிட்டனர். நடந்து முடிந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளியாகின. இதில் மொத்தம் பதிவான வாக்குகளில் சியோமாரா காஸ்ட்ரோ 53 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அஸ்புரா 34 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். இதன்மூலம் 12 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த நாட்டில் இடதுசாரி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இதன்மூலம் ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையையும் சியோமாரா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.