பனிப்பாறைகள் வேகமாக உருகி வரும் அபாயம் - 12 கோடி மக்கள் பாதிக்கப்படுவர் என ஐ.நா. எச்சரிக்கை
Oct 19 2021 6:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பருவநிலை மாற்றத்தால், ஆப்பிரிக்காவில் உள்ள மக்கள் வறட்சி, வெள்ளம், அதீத வெப்பம் உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
ஆப்பிரிக்காவில் கென்யா உள்ளிட்ட நாடுகள் கடுமையான வறட்சியை சந்தித்துள்ள நிலையில், கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில், 2020-ம் ஆண்டு பரவலாக வெள்ளம் ஏற்பட்டது. அதே சமயம், தொடர்ந்து 3-வது ஆண்டாக உயர்ந்துள்ள ஆப்பிரிக்காவின் வெப்பநிலை, சராசரி வெப்பநிலையை விட பூஜ்யம் புள்ளி எட்டு ஆறு டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சர்வதேச வெப்பநிலையை ஒப்பிடும்போது, ஆப்பிரிக்காவின் வெப்பநிலை அதிக வேகத்தில் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், தான்சானியாவின் கிளிமாஞ்சாரோ, கென்யாவின் மவுண்ட் கென்யா மற்றும் உகாண்டாவின் ருவென்சோரிஸ் ஆகிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் 2040-ம் ஆண்டிற்குள் முற்றிலும் உருகி விடும் என ஆப்பிரிக்காவுக்கான ஐ.நா. சபையின், பருவநிலை மற்றும் இயற்கை வளங்கள் பிரிவு எச்சரித்துள்ளது. இதன் விளைவாக, சுமார் 12 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும், ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.