சீன அரசுக்கு எதிரான செய்தி வெளியிட்டதாகக் குற்றச்சாட்டு - பத்திரிகையின் தலைமை செய்தி ஆசிரியர் அதிரடி கைது
Jun 18 2021 2:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீன அரசுக்கு எதிரான செய்தி வெளியிட்டதாகக் குற்றம்சாட்டி, ஜனநாயக சார்பு பத்திரிகை அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்ட ஹாங்காங் போலீசார், தலைமை செய்தி ஆசிரியரை கைது செய்தனர்.
ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற நிறுவனம் சார்பில் ஆப்பிள் டெய்லி என்கிற தினசரி செய்தித்தாள் பிரசுரமாகி வருகிறது. இந்த செய்தித்தாளில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராகவும், அதன் தலைவர்களின் சர்வாதிகாரப் போக்கை விமர்சித்தும், ஹாங்காங்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கட்டுரைகளும், செய்திகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இந்த பத்திரிகையின் உரிமையாளர் ஜிம்மி லாய், சீனாவுக்கு எதிராக போராடிய வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆப்பிள் டெய்லி பத்திரிகை, தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக கூறி, 500-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பத்திரிகை அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அதனை தொடர்ந்து பத்திரிகையின் தலைமை செய்தி ஆசிரியர் மற்றும் மூத்த நிர்வாகிகள் 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அந்த பத்திரிகை நிறுவனத்துக்கு சொந்தமான 17 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் போலீசார் முடக்கினர்.