நேபாளத்தில் ஆளும் கட்சியிலிருந்து பிரதமர் திடீர் நீக்கம் : சொந்த கட்சிக்குள்ளேயே ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக நடவடிக்கை
Jan 25 2021 6:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நேபாளத்தில் ஆளும் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
நேபாள நாட்டின் பிரதமராக செயல்பட்டு வருபவர் கே.பி.சர்மா ஒலி. இவர் ஆளும் நேபாள கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். பிரதமர் கே.பி.சர்மாவுக்கும், ஆளும் கட்சியின் நிர்வாகக்குழு தலைவர் புஷ்ப கமல் தஹார் பிரசந்தாவுக்கும் இடையே அதிகார போட்டி ஏற்பட்டதால், நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் ஒலி, கடந்த ஆண்டு 20-ம் தேதி பரிந்துரைத்தார். இதையடுத்து, வரும் ஏப்ரல் - மே மாதத்தில் தேர்தல் நடத்த அதிபர் பித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டார்.
இந்த விவகாரத்தால் ஆளும் நேபாள கம்யூனிஸ்டு கட்சி கே.பி.சர்மா ஒலி தலைமை மற்றும் புஷ்ப கமல் தஹார் தலைமை என 2-ஆக பிளவுபட்டது. பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கு எதிராக புஷ்ப கமல் தஹாரின் தலைமையிலான பிரிவு, நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. மேலும், நேபாள கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் பதவியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கே.பி.சர்மா ஒலி நீக்கப்பட்டார். இந்நிலையில், புஷ்ப கமல் தஹார் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சியின் பிரிவின் மத்திய கமிட்டி கூட்டத்தில், கே.பி.சர்மா ஒலியை நேபாள கம்யூனிஸ்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.