ராணுவ தளபதி சுலைமானி கொலை செய்யப்பட்டதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு, ஈரான் மிரட்டல்
Jan 23 2021 11:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராணுவ தளபதி சுலைமானி கொலை செய்யப்பட்டதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு, ஈரான் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்துள்ளது.
கடந்தாண்டு ஜனவரி மாதம் ஈரான் நாட்டின் ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி, ஈராக் நாட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையம் அருகே, அவரை குறிவைத்து அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுலைமானி கொல்லப்பட்டார். அமெரிக்கர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சுலைமானி செயல்பட்டதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. இதற்குப் பதிலடியாக ஈரான் ராணுவமும் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பல அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், ஈரான் நாட்டுத் தலைவர் அயதுல்லா அலி கமேனி தனது ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டிரம்பை போல இருக்கும் ஒருவர் கோல்ஃப் விளையாடுவதும், அந்த நபர் டிரோன் விமானம் மூலம் குறிவைக்கப்படுவதும் போல உள்ளது. மேலும், அதில் நிச்சயம் பழிவாங்கப்படும் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் அமைந்துள்ள இந்த ட்வீட் போலி கணக்கிலிருந்து பதிவேற்றம் செய்துள்ளதாகக் கூறி, அதனை டிவிட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது.