கொரோனா சிகிச்சைக்கு முக்கியத்துவம் தருவதால், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கான சிகிச்சை கடும் பாதிப்பு - உலக சுகாதார அமைப்பு கவலை
Jun 2 2020 10:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு முக்கியத்துவம் தருவதால், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களுக்கான சிகிச்சை, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
155 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதில் சரிபாதிக்கும் மேற்பட்ட நாடுகளில், கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியதில் இருந்து, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 90 சதவீதம் நாடுகளில், அனைத்து சுகாதாரப்பணியாளர்களும் கொரோனா சிகிச்சையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், 42 சதவீத நாடுகளில், புற்றுநோய் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 31 சதவீத நாடுகளில் இதய நோய்க்கான சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டெட்ரோஸ் அதனோம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில், இதர மருத்துவ சேவைகளில் இடையூறு ஏற்படாமல் இருப்பதற்கான வழியை உலக நாடுகள் கண்டறிய வேண்டும் எனவும், டெட்ரோஸ் அதனோம் குறிப்பிட்டுள்ளார்.