சிரியாவில் தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்காவைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவன், தாக்குதலுக்குத் தயாராகும் வீடியோ பதிவை அல்கைதாவின் அங்கமான அல் நஸ்ரா அமைப்பு வெளியீடு
Jul 30 2014 12:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில், தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்காவைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவன், தாக்குதலுக்குத் தயாராகும் வீடியோ பதிவை, அல்கைதாவின் அங்கமான அல் நஸ்ரா அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது.
சிரியாவில், அதிபர் பஷார் அல் ஆசாத் குடும்ப ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. உள்நாட்டுப்போர் காரணமாக, ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், சிரியாவில் கொல்லப்பட்டுள்ளனர். பல லட்சம் மக்கள் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு, தற்கொலைப்படைத் தாக்குதல் என சிரியா முழுவதும் கலவரங்கள் நடைபெற்று வரும் நிலையில், பல ஆயிரம் வெளிநாட்டு தீவிரவாதக் குழுக்களும், சிரியாவில் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, கடந்த மே 25-ம் தேதி சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் உள்ள ஜபால் அல்-அர்பீன் பகுதியில் இருந்த ராணுவ முகாம் மீது, அபு ஹுராய்ரா என்ற அமெரிக்க தீவிரவாதி உள்ளிட்ட 4 பேர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட அபுஹுராய்ரா அமெரிக்காவின் ஃபுளோரிடாவைச் சேர்ந்தவன் என்பது அப்போதே உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்க தீவிரவாதி அபு ஹுராய்ரா, தாக்குதலுக்குத் தயாரான மற்றும் அவனின் உரை அடங்கிய வீடியோவை அல் காய்தாவின் அங்கமான அல் நஸ்ரா அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது. தாக்குதலை நடத்துவதற்கு முன்பு அரபு மொழியில், சுமார் 17 நிமிடங்கள் அவன் ஆற்றிய உரை அதில் இடம்பெற்றுள்ளது. இதுபோன்ற தாக்குதலை நடத்திய முதல் அமெரிக்கக் குடிமகனும் இவன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்குதலுக்கு முன்னதாக மொனேர் முகமது அபு சால்ஹா எனும் அபு ஹுராய்ரா, தான் துப்பாக்கி வாங்குவதற்கு கூட காசில்லாமல், சிரியாவுக்கு வந்தாகவும், இங்கு இறைவன் தனக்கு துப்பாக்கி மட்டுமின்றி மேலும் பலவற்றை அளித்துள்ளதாகவும் அந்த வீடியோ பதிவில் பேசியுள்ளான்.
இந்த உலகில் தனக்கு அமைதி இல்லை. இறப்புக்கு பிந்தைய அமைதியைத் தேடிச் செல்கிறேன். அது இந்த உலகில் கிடைக்காது, சொர்க்கத்தில்தான் கிடைக்கும்" என்றும் அபு ஹுராய்ரா அதில் தெரிவித்துள்ளான். தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ பதிவு, சிரியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.