ஸ்காட்லாந்து மக்கள் தங்களின் எதிர்காலத்தைப் பற்றி கவனமாக சிந்தித்து வாக்களிப்பார்கள் : ராணி எலிசபெத் கருத்து
Sep 16 2014 12:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரிட்டனிடமிருந்து ஸ்காட்லாந்து தனி நாடாக பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், ஸ்காட்லாந்து மக்கள் தங்களின் எதிர்காலத்தைப் பற்றி கவனமாக சிந்தித்து வாக்களிப்பார்கள் என நம்புவதாக ராணி எலிசபெத் வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
பிரிட்டனிடமிருந்து ஸ்காட்லாந்து பிரிந்துபோவது பற்றிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு பற்றி பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் முதல் முறையாக தனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். மக்கள் வியாழக்கிழமை தங்கள் வாக்குகளை போடும் போது எதிர்காலத்தைப் பற்றி கவனமாக சிந்தித்து வாக்களிப்பார்கள் என்று தான் நம்புவதாக அவர் கூறினார். அவரது கருத்துக்கள் ஸ்காட்லாந்து சுதந்திரத்துக்கு எதிரானவர்களுக்கு ஆதரவானதாக கருதப்படுகிறது. பிரிட்டிஷ் அரசி எலிசபெத் இந்தக் கருத்துக்களை ஸ்காட்லாந்தில் உள்ள அவரது பால்மோரால் எஸ்டேட்டுக்கு அருகில் உள்ள க்ரேத்தி தேவாலயத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த பொதுமக்களில் ஒருவரிடம் பேசும்போது தெரிவித்தார்.
பிரிட்டனின் ஒரு அங்கமாக செயல்பட்டு வந்துள்ள ஸ்காட்லாந்து, இதுநாள் வரை இங்கிலாந்துடன் இணைந்துள்ளபோதிலும், கடந்த 1999-ம் ஆண்டு முதல் தனி நாடாளுமன்றமாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், தற்போது, பிரிட்டனிடமிருந்து முழு விடுதலை பெற நினைக்கும் ஸ்காட்லாந்து வரும் 18-ம் தேதி இதற்கான வாக்கெடுப்பை பொதுமக்களிடம் நடத்தவுள்ளது. ஆனால் ஸ்காட்லாந்து பிரிந்து செல்வதை இங்கிலாந்து விரும்பவில்லை. கடந்த 307 ஆண்டுகளாக இணைந்திருக்கும் ஸ்காட்லாந்து பிரிந்து போகாமல் இருந்தால் அதற்கு மேலும் கூடுதலாக தன்னாட்சி உரிமை உள்ளிட்ட அதிகாரங்கள் வழங்கப்படும் என்று இங்கிலாந்து உறுதியளித்துள்ளது.
இந்நிலையில், ஸ்காட்லாந்து தனி நாடாக பிரிந்து செல்வதை ராணி எலிசெபத் விரும்பவில்லை என்றும், ஓரிரு நாட்களில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதால், அவர் பெரும் கவலை அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஸ்காட்லாந்து பிரிவதை பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனும் விரும்பவில்லை. எனவே, ஸ்காட்லாந்து பிரிட்டனிடமிருந்து பிரிந்து போனால் தான் மனமுடைந்து விடுவேன் என்று கேமரூன் கூறியுள்ளார். இவ்வாறு பெருந்தலைவர்கள் ஸ்காட்லாந்து தனி நாடாக பிரிவதை விரும்பாத நிலையில், அந்நாட்டின் மக்கள் தொகையில் பாதிபேர் ஸ்காட்லாந்து பிரிவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மீதமுள்ளோர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதன்காரணமாக மக்கள் அனைவரும் ஸ்காட்லாந்து தனி நாடாக உருவாவதற்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்க வலியுறுத்தி ஸ்காட்டிஷ் கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.