உக்ரைன் அரசுக்கும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பிறகும், கிழக்கு உக்ரைனின் டொநெட்ஸ்க் விமானநிலையத்தில் தொடர் சண்டை
Sep 25 2014 1:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைன் அரசுக்கும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பிறகும், கிழக்கு உக்ரைனின் டொநெட்ஸ்க் விமானநிலையத்தில், தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது தொடர்பாக கடந்த ஆண்டு இறுதியில் உக்ரைனில் எழுந்த போராட்டங்கள் அங்கு பிரிவினைக்கு வழி வகுத்தது. கிழக்குப் பகுதி பிராந்தியமான கிரிமியா ரஷ்யாவுடன் இணைய, அதனைத் தொடர்ந்து உக்ரைனின் மற்ற சில பகுதிகளும் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தன. இதனை உக்ரைன் அரசு எதிர்க்கவே ரஷ்ய ஆதரவுப் போராளிகள் டோநெட்ஸ்க் பகுதியைத் தங்களின் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் இங்குள்ள விமான நிலையம் தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது. அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகள் தலையிட்டதைத் தொடர்ந்து உக்ரைனில் நடைபெற்றுவந்த யுத்தம் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
கடந்த சனிக்கிழமை அன்று ஒரு புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் இருதரப்பினராலும் கையெழுத்திடப்பட்டது. தொடர்ந்து போர் நிறுத்த இடைப்பகுதியை உருவாக்க ஏதுவாக இரு தரப்பு துருப்புகளும் மீண்டும் அழைக்கப்பட்டன. இருப்பினும் டோநெட்ஸ்கின் விமான நிலையத்தை சுற்றி ரஷ்ய ஆதரவு போராளிகளுக்கும், அரசு துருப்புகளுக்கும் சண்டை நடைபெற்று வருவதாக பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் நடைபெற்ற சண்டையில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள விமான நிலையத்தில் தாக்குதல்கள் தொடர்ந்ததாகவும் இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் தீ ஜுவாலைகளும், புகை மேகங்களும் காணப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.