போலந்துப் பேராயர் ஜோசஃப் வெஸொ லொவ்ஸ்கியை சிறார் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்ய போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் உத்தரவு
Sep 27 2014 11:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
போலந்துப் பேராயர் ஜோசஃப் வெஸொ லொவ்ஸ்கியை சிறார் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்ய போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்த பேராயரைக் காப்பாற்ற முயன்ற பராகுவே பேராயரையும் பதவி நீக்கம் செய்துள்ளார்.
சிறுபிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டினை கர்ரீபியன் தீவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் 66 வயதான போலந்து பேராயர் மீது முன்வைக்க திருச்சபை அங்கியை அவர் ஏற்கனவே கழற்ற வேண்டியதாயிற்று. மேலும், வத்திகானத்தின் மூத்தப் பிரதிநிதியாக இருந்த ஜோசஃப் வெஸொ லொவ்ஸ்க்கி சென்ற ஆண்டு ரோமுக்கு திரும்ப அழைக்கப்பட்டார்.
2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் டொமினிக்கன் குடியரசில் சிறார் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக வத்திகானத்தின் தலைமை சட்ட நடவடிக்கை அதிகாரியால் அவர் மீது முறையான குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டன. டொமினிக்கன் குடியரசில், வெஸொ லொவ்ஸ்கியின் கீழே வேலைபார்த்து வந்த ஊழியர் ஒருவர், உள்ளூர் காவல்துறைக்கு துப்பு கொடுக்க அவர் மீதான குற்றச்சாட்டு வெளியே வந்தது.
ஆனால் ராஜிய அதிகாரிகளுக்குரிய அந்தஸ்து பேராயருக்கு இருந்ததால், டொமினிக்கன் குடியரசினாலும், அவரது சொந்த நாடாகிய போலந்தினாலும் வெஸொ லொவ்ஸ்கி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது. இந்நிலையில், ரோமிலுள்ள கிறிஸ்தவ மடம் ஒன்றில் வாழ்ந்துவந்த இவரைக் கைதுசெய்யச் சொல்லி போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த அளவுக்கு உயர் பதவி கொண்ட ஒரு கத்தோலிக்கப் பிரதிநிதி வத்திகானத்தில் கைது செய்யப்படுவதென்பது இதுவே முதல் முறை.
உடல்நலப் பாதிப்புகள் இருப்பதால் கைதுக்குப் பின்னர் வெஸொ லொவ்ஸ்கியை சிறையில் அடைக்காமல் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக வத்திகானம் சார்பாகப் பேசவல்லவர் கூறினார். இந்த வருடத்தின் பிற்பகுதியில் வத்திகான நீதிமன்றத்தில் இவர் மீது வழக்கு நடக்கும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, அந்த பேராயரைக் காப்பாற்ற முயன்ற பராகுவே பேராயரையும் போப்பாண்டவர் பதவி நீக்கம் செய்துள்ளார்.