அமெரிக்காவுடனான புதிய ராணுவ ஒப்பந்தத்திற்கு கடும் கண்டனம் - ஒபாமா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பிலிப்பைன்ஸ் மக்கள் மீது போலீசார் தாக்குதல்
Apr 23 2014 4:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவுடனான புதிய ராணுவ ஒப்பந்தத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸ் மக்கள், அந்நாட்டிற்கு ஒபாமா வருவதற்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது, போலீசாருடன் மோதல் ஏற்பட்டது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் சுமார் 94 ஆண்டுகளாக ராணுவ தளம் அமைத்திருந்த அமெரிக்கா, கடும் எதிர்ப்பு காரணமாக, கடந்த 91-ம் ஆண்டு ராணுவத் தளங்களை காலி செய்தது. எனினும், தற்போது பிலிப்பைன்சுடன் இணைந்து சில கூட்டு ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பிலிப்பைன்சுடன் மிகப்பெரிய அளவில் மீண்டும் ராணுவ ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக அந்நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா செல்லவுள்ளார். இதன் மூலம், அமெரிக்கா தனது ராணுவ ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸ் மக்கள், ஒபாமாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் மணிலாவில் போராட்டம் நடத்தினர். அப்போது, காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பசிபிக் கடல் பகுதியில் தனது ராணுவ பலத்தை பெருக்கிக் கொள்வதற்கும் சீனாவின் கப்பல் போக்குவரத்தை கண்காணிப்பதற்காகவே பிலிப்பைன்சுடன் அமெரிக்கா மீண்டும் புதிய ராணுவ ஒப்பந்தத்தை ஏற்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சீனாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டை காப்பாற்றும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்கா கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று பிலிப்பைன்ஸ் மக்கள் தெரிவித்துள்ளனர்.