நைஜீரியாவில், போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளில், 11 மாணவிகளின் பெற்றோர் உயிரிழந்ததை அறிந்த நைஜீரிய அதிபர், அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேற்கத்திய கலாச்சாரத்திற்கு தாங்கள் எதிரானவர்கள் என பறைசாற்றிக் கொள்ளும் போகோ ஹராம் தீவிரவாதிகள், நைஜீரியாவில், தங்கள் மதக் கோட்பாடுகள், சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியைக் கொண்டுவர முயன்று வருகின்றனர். இதன் காரணமாக, கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் குழுவாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவு இறக்கமின்றி கொன்று குவிக்கின்றனர். மேலும், நைஜீரியா முழுவதும் கொலை, கொள்ளை, குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சூடு, ஆள்கடத்தல் போன்ற கொடூர செயல்களையும் அரங்கேற்றி வருகின்றனர். இதில், கடந்த ஓராண்டில் மட்டும் ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி மேற்கத்திய கல்வி பயின்றுவந்த 276 பள்ளி மாணவிகளை, வடகிழக்கு நைஜீரியாவின் போர்னா மாவட்டத்தில் உள்ள சிபோக் சிபோக் பகுதியிலிருந்து கடத்திச் சென்றனர். அந்த மாணவிகள் கடத்தப்பட்டு 3 மாதங்களுக்கு மேலாகியும், தற்போது அவர்கள் எங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியாத நிலையில், மாணவிகளை மீட்க வலியுறுத்தி நைஜீரியாவில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உலக நாடுகள் பலவும் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை மீட்க நைஜீரியாவுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றன.
ஆனால், கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் கூட்டாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று போகோ ஹராம் தீவிரவாதிகள், நைஜீரியா அரசை வலியுறுத்தினர். இல்லையென்றால், மாணவிகளை விற்றுவிடுவோம் என்றும் மிரட்டினர். தீவிரவாதிகளின் இந்த கோரிக்கையை முற்றிலும் நிராகரித்த அந்நாட்டு அதிபர் குட்லக் ஜொனாத்தன், போகோ ஹராம் குழுவினரை அடியோடு ஒழிக்க நைஜீரிய ராணுவத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து, ராணுவ வீரர்கள் கடும் தேடுதல் வேட்டை நடத்தியதில், மாணவிகள் கடத்தப்படுவதற்கு போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு உதவியதாக தொழில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், 3 பெண் தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே கடத்தப்பட்ட 276 மாணவிகளில் 57 மாணவிகள் தப்பி வந்துள்ள நிலையில், மீதமுள்ள 219 பேர், தீவிரவாதிகளின் பிடியிலேயே சிக்கியுள்ளனர். இந்நிலையில், அவர்களில் 11 மாணவிகளின் பெற்றோர், துக்கம் தாளாமல் நெஞ்சுவலி மற்றும் இரத்த அழுத்தம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இதனையறிந்த நைஜீரிய அதிபர் குட்லக் ஜொனாத்தன், அந்தந்தக் குடும்பங்களின் உறுப்பினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, மாணவிகள் கூடிய விரைவில் மீட்கப்படுவார்கள் என்று நம்பிக்கையும் அளித்தார். அதனால், பெற்றோர்கள் அனைவரும் எந்தவித தவறான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.