லிபியாவில் தோன்றியுள்ள அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல்
Sep 27 2014 11:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லிபியாவில் தோன்றியுள்ள அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. போராளிக்குழுக்களை கட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திரப் பொதுக்கூட்டம் தற்போது வியன்னாவில் நடைபெற்று வருகின்றது. இதில் 40-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஐ.நா. பொதுச்செயலர் பான்-கி-மூன் உரையாற்றும்போது லிபியாவில் காணப்படும் அரசியல் நெருக்கடியும், ராணுவ மோதல்களும் அந்நாட்டின் ஜனநாயக அமைப்பில் ஆபத்தான, குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன என்றும், லிபிய அரசு இந்த நெருக்கடியைத் தீர்க்க முயல வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
லிபியாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகார ஆட்சி புரிந்து வந்த முயம்மார் கடாஃபி, கடந்த 2011-ம் ஆண்டு உள்நாட்டுப் போராளிக் குழுக்களின் துணையுடன் ராணுவத்தினரால் பதவியிலிருந்து இறக்கப்பட்டு மரணத்தையும் தழுவினார். ஆனால் அதன்பின் அங்கு அமைந்த அரசுகளால் போராளிக் குழுக்களைத் தங்களின் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இந்தக் குழுக்கள் நாட்டின் பல பகுதிகளைத் தங்களின் கட்டுக்குள் வைத்துக் கொண்டு அதிகாரத்தை வெளிப்படுத்தி வந்தன.
தலைநகர் திரிபோலியின் விமான நிலைய அதிகாரம் குறித்து சமீபத்தில் அங்கு ஏற்பட்ட சண்டையானது பொதுமக்கள் பலரை பலியாக்கியதுடன் ஏராளமானவர்களைத் தங்கள் இருப்பிடங்களில் இருந்தும் வெளியேற வைத்துள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான பென்காசியும் போராளிகள் வசம் வீழ, அரசாங்க அலுவல்கள் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள டோப்ருக் நகரில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.